Sunday, December 20, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

7 comments:

தமிழன்-கறுப்பி... December 20, 2009 10:08 PM  

//ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..”//

உண்மையாவா?! :))

சின்ன அம்மிணி December 21, 2009 12:27 AM  

இனிமே இவ்வளவு நகையோட வீட்டுல யாரையும் கூட்டீட்டு போகாதீங்க :)

☀நான் ஆதவன்☀ December 21, 2009 7:03 AM  

//ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன். //

:))))))))))))) உண்மைச் சம்பவமா இது?

//பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..”//

இதென்னவோ நம்புற மாதிரி தான் இருக்கு :)

ஷாகுல் December 21, 2009 9:41 AM  

//ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க//

அவங்க கவனிக்கிற அளவுக்கு அப்பிடி முழிச்சிருகீங்க.

:))

நாணல் December 21, 2009 7:34 PM  

:))

சந்தனமுல்லை December 21, 2009 7:39 PM  

:-))))) நீங்க பல்பு வாங்கற எக்ஸ்பர்ட் போல இருக்கே!!

cheena (சீனா) December 29, 2009 6:27 AM  

அன்பின் தமிழ் பிரியன்

நல்ல நகைச்சுவை - நாம் எபோழுதுமே இப்படித்தான் - நம் கவலை நமக்கு - தங்க்ஸ்களுக்குப் புரியாது - நல்லது நடக்கும் வரை சரி - ஏதேனு நடந்து விட்டால் நாமெல்லவோ துயரப்பட வேண்டும்

நல்ல இடுகை - நகைச்சுவை அதிகம் - கடைசி பத்தி சூப்பர்

நல்வாழ்த்துகள் தமிழ்பிரியன்

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP