Sunday, December 20, 2009

பார்த்தது, கேட்டது,படித்தது.

சின்ன வயசில் வாரமலரில் வரும் பாகேப விரும்பி படிப்பேன். இப்ப அதை விட சுவாரஸ்யமாக பதிவுலகில் வருவதால் இதுவே இனிமையா இருக்கு..அந்த ஸ்டைலில் இன்னைக்கு ஒரு பார்த்தது, கேட்டது,படித்தது.

கேட்டது:



நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.. ஒரு இளைஞன் கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவள் மீது அளவில்லாத அன்பு செலுத்தினான். கண் தெரியாதவள் என்றாலும் அழகானவள். காதலன் அவளிடம் திருமணம் பற்றிப் பேசிய போது அவள் தனக்கு கண் தெரிந்தால் தான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி விடுகின்றாள்.

காதலன் யோசித்து, பல சிரமங்களுக்கு இடையில் அவளுக்கு கண் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான். கண் பார்வை கிடைத்தவுடன் முதன் முதலாக காதலனைக் காண அவள் விரும்புகின்றாள். அவனைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் குருடாக இருக்கின்றான். அவனைக் திருமணம் செய்ய மறுத்து விடுகின்றாள். காதலன் சோகத்துடன் ஏதும் பேசாமல் திரும்பிச் செல்கின்றான். அப்போது அவன் நினைத்துக் கொண்டதைக் கடைசியில் சொல்கின்றேன்.

பார்த்தது:
ஒரு விளம்பரம்.. எங்க முன்னாள் பேவரைட் சோப்பான லைப்பாய்க்கு ஒரு விளம்பரம். இரண்டு பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளின் சோப்பை மாற்றியதால், சுகாதாரமானதாக இருந்ததாக வரும். ஒரு பில்டிங்கில் இருக்கும் குடும்பம் பழைய சோப்பை தொடர்ந்ததாகவும், அடுத்த பில்டிங் முழுவதும் லைப்பாய்க்கு மாறியதாகவும் சொல்லி விட்டு, இறுதி முடிவில் லைப்பாய் பயன்படுத்திய பில்டிங்கில் இருக்கும் குழந்தைகள் 40 சதவீதம் அதிகமாக பள்ளிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.

சுத்தமான லாஜிக் ஓட்டைகள், நடைமுறைக்கு முரணாக இருக்கின்றது என்றாலும், லைப்பாய் பயன்படுத்தியதை சொல்லும் போது தினமும் ஐந்து முறை லைப்பாய் பயன்படுத்தியதாக கீழே குறிப்பு வருகின்றது. அடப்பாவிகளா? லைப்பாய் சோப்பு போட்டு வாரத்துல இரண்டு தடவை குளிப்பதே கஷ்டம்.. இதுல டெய்லி 5 முறையாம்.. ஓவரா இல்லியா?


படித்தது:
திரு. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய தென் இந்திய வரலாறு என்று நூல் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. கொஞ்சமா புரட்டியதில் சில சேதிகள். சங்ககாலத்தில் தொடங்கி, கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை உள்ள வரலாறுகளைத் தொகுக்க பல சிரமங்களை 1950 களில் முயன்று உள்ளார். தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் பொதுவான அகத்திய முனிவர் பற்றிய சில மரபுக் கதைகள் சுவாரஸ்யமா இருக்கு.

ஒரு சந்தர்ப்பத்தில் அகத்திய முனிவர் செல்வத்தின் தேவை காரணமாக மணிமதி என்ற நாட்டை ஆண்ட தைத்திரிய மன்னனாகிய இல்வலனிடன் சென்றார்.இல்வலன் பிராமணர்களிடம் விரோதம் கொண்டவன். அவனுக்கு ஒரு தம்பியும் இருந்தான். அவன் பெயர் வாதாபி. இல்வலன் வாதாபியை ஆட்டுக் கிடாயாக மாற்றி, அறுத்து சமையல் செய்து பிராமணர்களுக்கு உணவளிப்பான். பிராமணர்கள் உண்டதும் இல்வலன் தனது தம்பியை பெயர் கூறி அழைப்பான். உடனே வாதாபி பிராமணர்களின் வயிற்றைக் கிளித்து வெளியேறி அவனது பழைய உடலை அடைந்து விடுவான். இது மாதிரி பல பிராமணர்களை வில்வலன் கொன்றான்.

அகத்தியர் அவனிடம் வந்ததும் அவனும் அதே போல் தம்பியை சமைத்துக் கொடுத்தான். அகத்தியர் உணவருந்தியதும் தம்பியை அழைக்க தம்பி வரவில்லை. அகத்தியரின் வயிற்றில் செரிமானமாகி விட்டான். வேறு வழி இல்லாமல் பெரும் செல்வத்தைக் கொடுத்து, தனது தம்பியை அகத்தியரிடம் இருந்து மீட்டதாக கதை செல்கின்றது.. நல்லா இருக்குல்ல.. கதை!

அடுத்து இன்னொரு வித்தியாசமான விஷயம்.. தமிழர்களின் வரலாறு. சங்க காலத்துக்கு முன்னால் இருந்த தமிழக வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை என நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். மேலும் சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றும் கூறுகின்றார். (நான் பள்ளி படிக்கும் காலங்களில் ஆ.வி .. ஹாய் மதன் இது பற்றி சொல்லி ஏதோ சர்ச்சையில் சிக்கிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது)
கன்னியாகுமரி வரையிலான தமிழகம் உருவான பரசுராமன் கதையைச் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகின்றேன்.

எங்க பாண்டிய நாடு பற்றிய ஒரு சுவையான செய்தி. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஹெர்குலிஸ் மன்னர்களின் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகள் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக மெகஸ்தனீஸ் கூறுகின்றார். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்காலம். ஹெர்குலிஸின் மகளான ‘பாண்டையா’ என்பவருக்கு தமிழகத்தின் பகுதிகளை ஆட்சி செய்யக் கொடுத்ததாகவும், அதனால் பாண்டியர்கள் என்ற மரபு வந்ததாகவும் குறிப்பாகச் சொல்கின்றார். ரோம்பப்பேரரசரின் கடற்படைகள் தென்னிந்தியக் கடல் பகுதியில் வந்து கைப்பற்றியதாகவும் சொல்கின்றார்.

நேரம் கிடைக்கும் போது அதில் இருக்கும் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

கேட்டதின் விடை:
உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை.

5 comments:

ஆயில்யன் December 20, 2009 8:45 PM  

//உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை. //

அ(ட)ப்பாவி!

தமிழன்-கறுப்பி... December 20, 2009 9:41 PM  

http://www.youtube.com/watch?v=NoUo2yb8TMI&feature=related

தமிழன்-கறுப்பி... December 20, 2009 9:51 PM  

எழுதுங்க எழுதுங்க..

ராமலக்ஷ்மி December 21, 2009 5:28 AM  

கேட்டதின் விடை உருக்கம்.

cheena (சீனா) December 29, 2009 6:32 AM  

அன்பின் தமிழ் பிரியன்

கதை அருமை - முடிவு - கடைசி வரை படித்து விட்டு முடிவினைப் படித்தேன் - இது கதை - நச்சென்ற முடிவு - மத்ததெல்லாம் கூட நல்லாருக்கு

நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP